இட் வாஸ் ஏ டஃப் வீக். இத நீங்க படிக்க கஷ்ட பட்டத விட கஷ்டமா இருந்துது, உண்மையாவே. 6 மாசமா தேவைக்காக மட்டுமே வெளியில போய்ட்ருந்தோம், ஆனா இந்த 6 நாள் அத விட மோசம். ஜன்னல், கதவு எல்லாம் கூட தெறக்காம வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதா போச்சு. Lockdown க்கு உள்ள ஒரு lockdown, ஒரு பயம், தயக்கம். ஒரு வழியா எல்லாம் சரி ஆயிடுச்சுன்னு நியூஸ் வந்தப்புறம் தான் தெம்பாச்சு. இப்போ எல்லாம் வேலை நாள்ல என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கோ இல்லையோ, சனி ஞாயிறுக்கு ஏகப்பட்ட வேலை கொட்டி கெடக்கு. அடுத்த வாரத்துக்கு தேவையான காய்கறி பொருள் எல்லாம் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினேன். போயிட்டு வந்து ஒரு குளியல போடலாம்னு சென்டெட் கேண்டல பாத்ரூம் ல ஏத்தி வெச்சுட்டு ஜன்னல் எல்லாம் தெறந்து விட்டேன் வீட்டுக்குள்ள ஃபிரெஷ் ஏர் வரட்டுமேன்னு.
"புதிய வானம், புதிய பூமி" னு பாடிக்கிட்டே கடைக்கு போய் வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டு திரும்பி வரப்போ டிராபிக் சிக்னல் கிராஸ் பண்ணப்பறம் ஒருத்தர பாத்தேன். சிக்னல் மாறினத கூட கவனிக்காம கிராஸ் பண்ணாமலே நின்னுக்கிட்ருந்தாரு. எதையோ தொலைச்சுட்டு தேடுற மாதிரி இருந்துது, வழி மாறி வந்துட்டாருனு தோணுச்சு. எனக்கு ஒண்ணும் பெருசா வழியெல்லாம் தெரியாது, ஆனா எந்த ஊருக்கு போகணும்னு சொன்னாருன்னா லெஃப்டா ரைட்டானு சொல்ற அளவு தெரியும். போய் கேக்கலாம்னு நெனைக்கிறப்போ அவர் மாஸ்க் போடலன்னு கவனிச்சு தள்ளியே நின்னேன். "ஏதாவது தொலைச்சுட்டீங்களா? இல்ல இடம் ஏதும் தவறி வந்துட்டீங்களா?" ன்னேன். திடீர்ன்னு என் குரல் கேக்கவே அவருக்குத் தூக்கி வாரி போட்டுது. ஒரு வழியா நிலமை புரிஞ்சு எனக்கு அவர் பதில் சொல்றதுக்குள்ள "நீங்க மாஸ்க் போடலையா?"ன்னு கேட்டுட்டேன், கேக்கலாமா கூடாதானு யோசிக்கிறப்போவே வார்த்தை வாயிலேர்ந்து வெளிய வந்துடுச்சு. அவர் அத கவனிச்சதா தெரியல. என் முதல் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சார். "நான் எங்க இருந்தேன்னு எனக்கு தெரியும், ஆனா இங்க இருந்து அங்க எப்படி திரும்பி போகணும்னு தான் தெரியலன்னார். "எங்க இருந்தீங்க? எப்படி இங்க வந்தீங்க?"ன்னு நான் கேட்டதுக்கு திக்கித் திணறி ஞாபகத்த வர வெச்சுகிட்டு சொன்னாரு.
"இடம் பேரெல்லாம் தெரியாது, ஆனா எனக்கு அங்க வழியெல்லாம் அத்துப்படி. எங்க விட்டாலும் சரியா போய் சேர்ந்துடுவேன். யாரையோ தொரத்தி ஓடுறப்போ ஒரு பழ வண்டியில ஏறின ஞாபகம், அப்புறம் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் முழிச்சேன், இங்க இருக்கேன்"னு அவர் சொன்னதும் லேசா மிரண்டு போயிட்டேன். "என்னங்க சொல்றீங்க? யாரையோ தொரத்தினீங்களா? என்ன ஆச்சு? யார? ஏன்? நீங்க யாரு?" னு வரிசையா அடுக்கினதுல ஏற்கனவே களைச்சு போன அவருக்கு தலையே சுத்த ஆரம்பிச்சுது. அவர ஓரமா இருக்கிற ஒரு பெஞ்சுல கூட்டிட்டு போய் உக்கார வெச்சு கைல இருந்த பையிலிருந்து ரெண்டு பழம் எடுத்து குடுத்து சாப்பிடுங்கன்னேன். இல்ல பரவாயில்லன்னு சொல்லிட்டு, அவர் கதைய சொல்ல ஆரம்பிச்சாரு.
எங்க வீட்டுல நான், அப்பா, அம்மா, தம்பி. நாலு பேரு. இன்னைக்கு என்னோட பொறந்த நாள். நேத்து சாயங்காலம் எங்க அப்பா அம்மா தெரிஞ்சவங்கள பாக்க கெளம்பிக்கிட்ருந்தாங்க, என்னையும் தம்பியையும் கூப்பிட்டாங்க. நான் நாள் பூரா அலைஞ்சதுல களைப்பா இருக்கு வரலன்னு சொல்லிட்டு தூங்க போயிட்டேன், அவங்க மூணு பேரும் தயார் ஆனாங்க. பத்திரமா இருந்துக்கோன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. திரும்பி வரும்போது எனக்கு புடிச்ச இடத்துலேர்ந்து சாப்பாடு ஏற்பாடு பண்ணி கொண்டு வரணும், பொறந்த நாளைக்கு surprise ஆ இருக்கும்னு அம்மா அப்பா கிட்ட சொன்னாங்க, எனக்கு கேக்காதுன்னு நெனச்சு. கேட்டுகிட்டே அசதில நான் தூங்கிட்டேன்.
கொஞ்ச நேரம் போச்சு, எவ்வளோன்னு தெரியல. ஏதோ சலசலன்னு சத்தம். எப்பவுமே சத்தம் வர்றது வழக்கம் தான், ஆனா இப்போ கொஞ்சம் வித்தியாசமா இருந்துது. முழிச்சு பாத்தேன், இன்னும் விடியாத மாதிரி தான் இருந்துது. ஆனாலும் விடிஞ்சப்புறம் கேக்குற சத்தம் எல்லாம் கொஞ்சம் பீதியான மாதிரி கேட்டுச்சு. பயந்து போய் சுத்தியும் முத்தியும் பாத்தேன், ஒரே மங்கலா இருந்துது. இந்நேரம் அப்பா அம்மா வந்துருக்கணுமே, இன்னும் வரல. தேடலாம்னு தெரிஞ்ச இடமெல்லாம் தேட போனேன். ஒரு பக்கம் அந்த ஊரு மனுஷாளுங்க இருக்கிற இடத்துல தேடினேன், ஒருத்தரையும் காணும். வீடு பூட்டிருந்தது. தொறந்திருந்தாலும் உள்ள எல்லாம் விட்டுட மாட்டாங்க. அதிக பட்சம் வெளிய வெச்சே தான், அடிக்காத குறை.
இன்னொரு பக்கம் போகலாம்னு போனேன். போக போக தூங்கி எழுந்தப்போ கேட்ட கூச்சல் சத்தம் அதிகமாச்சு. பக்கத்துல வர மாதிரி இருந்துது. என்னமோ சரியில்லன்னு புரிஞ்சுகிட்டு எல்லா பக்கமும் உஷாரா பாத்துகிட்டே போனேன். திடீர்னு எதிர் பக்கத்துலேர்ந்து மாமா ஓடி வந்தாரு, தல தெறிக்க, மூச்சை புடிச்சுகிட்டு. என்ன பாத்ததும் லேசா பெருமூச்சு விட்டு, "இங்க தான் இருக்கியா? உன்ன பத்திர படுத்த தான் வந்தேன்"னாரு. "பத்திரமா? என்ன ஆச்சு மாமா?"னு கேட்டேன். "ஊரு ஒரு பக்கமா தீப்புடிச்சு இந்த பக்கத்துக்கும் பரவிக்கிட்டிருக்கு"ன்னு சொன்னாரு. இது ஒண்ணும் புதுசில்ல. அப்பப்போ இடி மின்னல் விழறப்போ லேசா நெருப்பு பரவும். உயரமான மரம் இருக்கிற இடத்துல வாழ்றவங்க இத எதிர்பாத்து, அதுக்கு தயாராவே இருப்பாங்க. ஆனா இப்போ அவர் சொன்னது பயங்கரமா இருந்துது. "எப்படி இவ்வளோ பெருசா, இப்போ?" ன்னேன். "அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல, முதல்ல எதிர் பக்கத்துல கொஞ்சம் தள்ளி இருக்கிற ஆத்தோரமா போய் இருக்கிறது தான் சரி"ன்னு என்னையும் கூட வர சொன்னாரு. அவர் கூட ஈடு குடுத்து ஓட ஆரம்பிச்சேன், அப்போ தான் அப்பா அம்மா தம்பி நினைவே வந்தது, "பக்"குனு இருந்துது. "மாமா, மாமா!"ன்னு கத்திகிட்டே கேட்டேன். "அப்பா அம்மா பத்தி ஏதும் தகவல் உண்டா?". "இப்போதைக்கு எதுவும் இல்ல. அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சுருக்கும். பத்திரமா தான் இருப்பாங்க. நீ பயப்படாத"ன்னாரு. மறுபடி கொஞ்ச நேரம் போக "எப்படி இவ்வளோ பெருசா?"ன்னேன். மாமா ஓடிக்கிட்டே சொன்னாரு, "மான் வேட்டையாட வந்த நாலு பெரு ராத்திரி நல்லா கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு, குளிருக்கு ஏத்தி வெச்சிருந்த நெருப்ப அணைக்காம வண்டிய எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அடிச்ச காத்துல பத்திக்கிச்சு. பரவின வேகத்துக்கு எச்சரிக்க முடியல. என்ன நடக்குதுன்னு புரியறதுக்குள்ள அந்த ஊரு மொத்தமும் எரிஞ்சு போச்சு. அது மட்டும் பத்தாதுனு சுத்தி எல்லா பக்கமும் பத்திக்கிடுச்சு. இப்போ எங்க எதுக்கு போறோம்னே தெரியாம ஓடிக்கிட்ருக்கோம்"னு அலுத்துகிட்டாரு. நடுவுல குறுக்கு வழிய கடக்கிறப்போ கால் தடுக்கி சரிஞ்சு விழுந்துட்டேன். போன வேகத்துல மாமா கவனிக்கல. திரும்பி பாத்திருந்தாலும் பனி மூட்டத்துல தெரிஞ்சுருக்காது. ஓ! அது புகை மூட்டமா? இப்போ தான் புரியுது எனக்கு. பக்கத்துல வேகமா வண்டியெல்லாம் போற சத்தம். ரோட்டுப் பக்கம்னு தெரிஞ்சுது. ஓடின களைப்பு வேற, பசியில கண்ணும் மங்க ஆரம்பிச்சுது. சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு பாக்க போய் தான் பழ வண்டியில ஏறினேன். இப்போ இங்க இருக்கேன்"ன்னாரு.
எனக்கு அவர் சொன்னது புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. அவருக்கு என்ன சொல்றதுன்னே புரியல. அடுத்து எங்க போறது? எப்படி போறது? யார தேடுறது? ஒரு பதில் கூட இல்லாம வெறும் கேள்விகள மட்டும் வெச்சு தெணறிக்கிட்ருக்கிற அவருக்கு என்னால சொல்ல முடிஞ்சுது ஒரு சாரி தான். யாரையும் குத்தம் சொல்லி இப்போ பிரயோஜனம் இல்ல. திடீர்னு என்னமோ தோணவே, அவர் டக்குன்னு பெஞ்சுலேர்ந்து எழுந்து "நான் சீக்கிரம் இங்கேருந்து போகணும், நல்லதில்ல"ன்னு தனக்கு தானே சொல்லிக்கிட்டு என்கிட்டே "நான் கிளம்பறேன். அக்கறையா விசாரிச்சீங்க, ரொம்ப நன்றி"ன்னு சொல்லிட்டு அவர் புறப்பட்டாரு. இத்தனை கூச்சல் குழப்பத்துல பாவம் அவர் வால் எரிஞ்சு போயிருந்தத கூட அவர் கவனிக்கல.
அவர் கிளம்பின அடுத்த நிமிஷம் வீட்டுல ஏத்தி வெச்ச கேண்டல் ஞாபகம் தூக்கி வாரி போட்டுது. உடனே ஓடி வந்து ஒண்ணும் ஆகலன்னு பாத்தப்புறம் தான் மூச்சே வந்துது. வீடுங்கறது வெறும் ஒரு இடம் மட்டும் இல்ல ல?